சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வாரத்திற்கு 6 வேலை நாள்

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் பள்ளிகள், 2015ம் ஆண்டு முதல், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு: அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அடிப்படையில், 2015ம் ஆண்டு முதல், தினமும், 6 மணி, 10 நிமிடம் வீதம், வாரத்திற்கு ஆறு நாட்களில், 45 மணி நேரம் பள்ளிகள் இயங்கும்.பள்ளி வேலை நேரத்திற்குப் பின், ஒரு மணி, 20 நிமிடங்களுக்கு,
அடுத்த நாளுக்கான திட்டமிடல், பாடங்களை தயார் செய்தல் மற்றும் வரவுள்ள நாட்களுக்கான வேலைகளுக்குத் தேவையான தகவல்களை திரட்டுதல் போன்ற பணிகளை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 1,200 மணி நேரம் கல்வி கற்பிக்க வேண்டும்.

பள்ளி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக, ஆசிரியர்கள், 200 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில், தினசரி எட்டு வகுப்புகள் (பீரியட்) இருந்தால், முதல் பீரியட்டில் இருந்து ஐந்தாவது பீரியட் வரை, 45 நிமிடங்களாகவும், அதற்குப் பின், 40 நிமிடங்கள் வீதம் வகுப்புகள் நடைபெறும்.இவ்வாறு, சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவித்துள்ளது.

Comments