13 வயது மகளை சூதாட்டத்தில் இழந்த தந்தை: திருமண ஏற்பாடுகளில் மும்முரம்

மால்டா : பக்கத்துக்கு வீட்டுக்காரருடன், சூதாட்டம் ஆடிய ஒருவர், 13 வயது மகளை, பணயமாக வைத்து தோற்றுப்போனார். இதையடுத்து, எட்டாவது படிக்கும், அந்த மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம், மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில், சுகுமார் மண்டல் என்பவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.பல சுற்றுகள் நடந்த சூதாட்டத்தில்,
அந்த நபரிடம், மண்டல் தோற்றுப் போனார். 'இழந்ததை பிடிக்க வேண்டும்' என்ற வெறியில், எட்டாம் வகுப்பு படிக்கும், தன் மகளை வைத்தும், அந்த நபர் சூதாட்டம் ஆடியுள்ளார்.அதிலும், தோற்று போனதால், வேறு வழியின்றி, தன் மகளை, திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்து, தொடர்ந்து சூதாட்டம் ஆடியுள்ளார். அதிலும் அவர் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, அந்தச் சிறுமி, சூதாட்டத்தில் வெற்றி பெற்றவருக்கு, மணம் முடித்து கொடுக்கப்பட உள்ளார். இதற்கு, இரு குடும்பத்தாரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமணம், அடுத்த மாதம், 22ம் தேதி நடக்கிறது. முன்னதாக, கடந்த, 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், கிராமத்தாரும், உறவினர்களும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.அந்தச் சிறுமியின் வயதை விட, சூதாட்டத்தில் வெற்றி பெற்ற, பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு, இருமடங்கு கூடுதல் வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய செய்தி வெளியானதும், மாநில அதிகாரிகள், அந்த திருமணத்தை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.'இந்த பிரச்னைகளுக்கு, முக்கிய காரணம், எழுத்தறிவின்மை தான்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் அரசு, பதவியில் உள்ளது.

Comments