நடுவழியில் நிறுத்தப்பட்ட முதல்வர் வாகனம் : பேளூர் அருகே திடீர் பரபரப்பு

சேலம்: ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம், பேளூர் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதை அறிந்து, அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா நேற்று, ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட ஒன்பது இடங்களில் பிரசாரம் செய்தார். காலை, 11:00 மணிக்கு, சேலம் ஹோலிகிராஸ் பள்ளிக்கு, ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கிய அவர், 11:30 மணியளவில், அங்கிருந்து பிரசார வேனில் புறப்பட்டார்.
காலை, 11:50 மணிக்கு, மின்னாம்பள்ளியிலும், 12:20 மணிக்கு, வெள்ளாளகுண்டம் பிரிவு ரோட்டிலும், 1:00 மணிக்கு, வாழப்பாடியிலும் பேசினார். தொடர்ந்து, 1:45 மணியளவில் பேளூர் - தும்பல் பிரிவு ரோட்டில் பேசினார். அங்கிருந்து புறப்பட்ட பிரசார வாகனம், பேளூரை அடுத்த வேட்டைக்காரனூர் பகுதிக்கு, மதியம், 2:15 மணியளவில் வந்தபோது, திடீரென முதல்வர் வாகனம் நிறுத்தப்பட்டது. ஆள் நடமாட்டமில்லாத பகுதியில், முதல்வர் வாகனம் நிறுத்தப்பட்டதை கண்டு, அப்பகுதியில் இருந்த மக்கள் திரண்டு வந்தனர். 2:15 மணி முதல் 2:45 மணி வரை, அவர் ஓய்வெடுப்பதற்காக, பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. முதல்வர், முகத்தை சுத்தம் செய்து, உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தடுக்கப்பட்ட "பிரஸ்' வாகனம் : பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாகனத்துக்கு முன்னும், பின்னும் பத்திரிகையாளர்கள் வாகனங்களில், செய்தி சேரிக்க வந்தனர். பேளூர் வேட்டைக்காரனூர் பகுதியில், முதல்வர் வாகனம் நிறுத்தப்பட்டதை அறிந்து, அவற்றை போட்டோ எடுத்ததை கண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., செந்தில், பத்திரிகையாளர்களை கடிந்து கொண்டார். பத்திரிகையாளர் வந்த நான்கு வாகனங்களை, முதல்வர் வாகனத்தின் பின்னால் செல்ல அனுமதிக்கக் கூடாது என, அங்கிருந்த போலீசாருக்கு அவர் தடைபோட்டார். கட்சி வாகனங்கள் அனைத்தையும் அனுப்பிவிட்டு, அதன்பின், பத்திரிகையாளர் வாகனத்தை அனுப்பினார். இதனால், முதல்வரின் பிரசாரத்தில் செய்தி, போட்டோ எடுக்க முடியாத நிலைக்கு நிருபர்கள் தள்ளப்பட்டனர். அ.தி.மு.க.,வின் பிரசார செய்தியை எடுக்க, எஸ்.பி., தடை விதிப்பதை கண்டு, அங்கிருந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Comments