மின்வெட்டுக்கு தி.மு.க., காங்., கூட்டு சதி; ஏற்காட்டில் ஆதரவு கேட்டு ஜெ., பிரசாரம்

ஏற்காடு : தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு தி.மு.க., - காங்கிரசின் கூட்டுச்சதியே காரணம் என்று ஏற்காட்டில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., பேசினார். இந்த சதியில் இருந்து மீண்டு மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கியே தீருவேன் என பேசினார்.


இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்த ஜெ., ஹெலிகாப்டர் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். மின்னாம்பள்ளி பகுதியில் வேனில் இருந்த படி பேசுகையில்; தமிழகத்தில் நான் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்காக பல்வேறு நல்ல பணிகளை செய்து வருகிறேன்.
விலையில்லா அரிசி, விலையில்லா மின்விசிறி, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம், மடிக்கணினி, இலவச புத்தக பை, இலவச காலணி, வண்ண பென்சில்கள, இலவச சைக்கிள் என வழங்கி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்யும் வகையில் கல்வியில் புரட்சி செய்து வருகிறோம்.

இன்னும் அம்மா உணவகம், 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர், 10 முதல் 12 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ரூ. 727 கோடியில் மருத்துவ காப்பீடு திட்டம், குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு, 69 சதவீத இட ஒதுக்கீடு , ஏழைகளுக்கு வழங்கும் ஓய்வு ஊதிய தொகை ஆயிரமாக உயர்வு, வறட்சி நிவாரணம், ரூ. 3 ஆயிரத்து 898 கோடியில் 50 கோடியில் நிவாரண பணிகள், நில அபகரிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு போலீஸ், இப்படி பல்வேறு நல பணிகளை அரசு செய்து வருகிறது.

தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்த மின்வெட்டை சரி செய்து தமிழகத்தில் கொண்டு வந்த நேரத்தில் தி.மு.க., மாநில அரசு மீது அவதூறு பரப்பி வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு குறித்து பேசுகின்றனர். தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் எவ்வித கோளாறும் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிலையங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாம். இதனால் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி, நாப்தாவுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் மினவெட்டு உருவாக கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இது இயல்பாக ஏற்பட்ட கோளாறு அல்ல. தி.மு.க.,வின் ஆலோசனையின்பேரில் மத்திய அரசின் சதித்திட்டம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். என் மீது உள்ள கோபம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக , அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த இந்த சூழ்ச்சியை காங்கிரசும், தி.மு.க.,வும் இணைந்து சதி செய்கின்றன.

இருப்பினும், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு சுபிட்சமாக நிலையை உருவாக்கியே தீருவேன். இன்னும் நல்ல பல சாதனைகள் செய்ய வேண்டியுள்ளது. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள் இவ்வாறு ஜெ., பேசினார்.

Comments