தி.மு.க.,வை தோற்கடிக்கும் வகையில் களப்பணியாற்றுங்கள்: முதல்வர் ஜெயலலிதா

சென்னை : "லோக்சபா தேர்தலில், தி.மு.க., மண்ணை கவ்வும் வகையில், கட்சித் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்' என, அ.தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு, முதல்வர் எழுதிய, கடிதத்தில் கூறியிருப்பதாவது:மனிதநேயம் மிக்க, அண்ணாதுரை துவக்கிய கட்சி, தீய சக்தியின் பிடியில் சிக்கி, தவித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர் அண்ணாதுரை.


சரணாகதி:

எந்தக் கொள்கையை முன் வைத்து, அண்ணாதுரை ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, காங்கிரசின் காலடியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, சரணாகதி அடைந்திருக்கிறார்.இலங்கைத் தமிழர் அழிய, உறுதுணையாக இருந்தது; காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில், வெளியிட செய்யாமல் பார்த்துக் கொண்டது; முல்லைப் பெரியாறு பிரச்னையில், வாய்மூடி மவுனியாக இருந்தது; சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டிற்கு, ஆதரவாக ஓட்டு போட்டது; தமிழர்களுக்கு எதிரான, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்தது என, கருணாநிதியின் துரோக நடவடிக்கைகளை, அடுக்கிக் கொண்டே போகலாம்.
வேண்டுகோள்:

இப்படிப்பட்ட தமிழக மக்கள் நலனை அடகு வைத்து, தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்ளும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின், மக்கள் விரோத போக்கை, பட்டிதொட்டி எங்கும் பட்டியலிட்டு பரப்ப வேண்டும்.அத்துடன் அ.தி.மு.க., அரசின், இரண்டாண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துச் சென்று, அவற்றை ஓட்டுகளாக மாற்றி, வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., மண்ணை கவ்வும் வகையில், களப்பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments