கூட்டணி அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: சீட் பேரத்தை அதிகரிக்க மவுனம் காக்க தே.மு.தி.க., திட்டம்

"சீட்' பேரத்தை அதிகரிப்பதற்காக, கூட்டணி குறித்த அறிவிப்பை தள்ளிபோட தே.மு.தி.க., தலைமை முடிவெடுத்து உள்ளது. தே.மு.தி.க.,வை வலையில், வீழ்த்த தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடினார்.

அவருக்கு, காங்., துணைத் தலைவர் ராகுல், வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, காங்., நிர்வாகிகள்,
போட்டி, போட்டுக் கொண்டு, விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., - காங்., இடையே கூட்டணி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டது. தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்திலும், கூட்டணி தொடர்பான ஆலோசனை நடந்தது. கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், அக்கட்சி தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த செயற்குழு கூட்டத்தில், மாநில அரசை காட்டிலும் மத்திய அரசை கண்டித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வலியசென்று, விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த காங்., நிர்வாகிகள், இதனால் வாயடைத்து போயினர்.

மற்றொருபுறம், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ரீதியில், தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் செயல்பட்டு வருகின்றனர். "சீட்' உள்ளிட்ட பேரங்களை அதிகரிக்க வேண்டும் என்றால், இப்போதே கூட்டணி முடிவை எடுக்கக்கூடாது என்ற மனநிலையில், அக்கட்சி தலைமை உள்ளதே இதற்கு காரணம். இதை மனதில் வைத்தே, கூட்டணி தொடர்பான தகவல்கள் கசிய விடப்படுகின்றன.

தே.மு.தி.க., ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் இம்மாதம் 22ம் தேதி, தூத்துக்குடியில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு தூத்துக்குடியை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து தடபுடல் உபசரிப்புடன் தொண்டர்களை அழைத்து வருவதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கட்சி மூத்த நிர்வாகிகள் பலர், அதிருப்தியுடன் வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். அவர்களை கட்சியில் தக்க வைப்பதற்காக, கூட்டணி தொடர்பாக பேசி அவ்வப்போது பரபரப்பை எழுப்ப தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடி பொதுக்கூட்டத்திலும், இதே பார்முலாவை பயன்படுத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments