செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி

சென்னை : ‘செம்மொழி மாநாட்டு அதிகாரிகளாக இருந்தவர்கள், இப்போது நிதித் துறை அதிகாரிகளாக உள்ளனர். அவர்களிடம், மாநாட்டில் முறைகேடு நடந்ததா என்பதை விசாரிக்கலாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தரவு:


செம்மொழி மாநாட்டில் முறைகேடு நடந்ததாக, யாரோ ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஆதாரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஆனால், ‘எனக்கு சம்மன் அனுப்பப்படும்’ என, செய்திகள் வெளியாகி உள்ளன. சம்மனை பார்த்து அஞ்சப்போவதில்லை.மாநாடு நடந்தபோது, நிதித்துறை செயலராக இருந்தவர் தான், இப்போதும் அப்பொறுப்பில் உள்ளார். கோவை கலெக்டராக இருந்தவர் நிதித் துறையில் தான் பணியாற்றுகிறார். மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மாநாட்டை நடத்தும் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் இடத்திலும், அவர்கள் கையாண்ட கோப்புகளையும் ஆய்வு செய்தால், முறைகேடு நடந்ததா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அறிக்கை:

செம்மொழி மாநாட்டு செலவினங்கள், மாநில தலைமை கணக்காயரால் ஆய்வு செய்யப்பட்டது. மாநாட்டுக்கு அனுமதித்த, 239.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 232.26 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 6.50 கோடி ரூபாய் மீதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்த, விரிவான அறிக்கை அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொய்யான தகவல்களை கூறி, கோர்ட் நேரத்தை வீணடிப்பவர்கள் மீது, உரிய நடவடிக்கையை, கோர்ட் எடுக்கவேண்டும்.நெல்லுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானது அல்ல; இத்தொகையை கூடுதலாக்க வேண்டும்.தி.மு.க., பொதுக்குழு, புதிய பதவிகளைக் கொடுப்பதற்காக கூட்டவில்லை. தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதைத் தொண்டர்கள் நம்பவேண்டாம்.இவ்வாறு, கருணாநிதி கூறிஉள்ளார்.

Comments