மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், புதிய மின் திட்டங்களை உருவாக்கி, மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், தமிழகத்தில், 1957ல், மின் வாரியம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில், 1,040 யூனிட் ஆக இருந்த தனிநபர் மின் நுகர்வு, நடப்பாண்டு, 1,100 யூனிட்டை தாண்டியிருப்பது, மின் கழக அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஆண்டுதோறும், தமிழகத்தின் மின் தேவை, 300 முதல், 500 மெகா வாட் வரை, அதிகரிக்கிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவக்காற்று சமயம் காற்றாலைகள் உபயத்தால், மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை எட்டி, மின் தேவையையும் பூர்த்தி செய்கிறது.இதர மாதங்களில் மின் பற்றாக்குறை ஏற்படுவதால், மின் தடை செய்யப்படுகிறது. காற்றாலைகளின் மின் உற்பத்தி, நேற்று காலை, 16 மெகா வாட் ஆக சரிந்தது. தமிழகத்தின் மின் தேவை, 10,640 ஆக இருந்த நிலையில், 9,211 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது.இதனால், 1,429 மெகா வாட் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பகல் மற்றும் இரவில், நான்கு மணி நேரத்துக்கும் மேல் மின் தடை ஏற்படுகிறது.மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில், இதே நிலை நீடித்தால், தமிழகம் மின் உற்பத்தி மற்றும் தேவையில், தன்னிறைவு அடைய, மேலும் சில ஆண்டு ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக மின் வாரியம் துவங்கி, 55 ஆண்டு ஆகிய நிலையில், இன்னமும் மின் உற்பத்தி, வினியோகத்தில் தன்னிறைவு அடையாதது, மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments