பாட்மின்டன் : இந்திய சிந்து முன்னேற்றம் ; வெண்கலம் பெற்று வரலாறு படைக்கிறார்

குவாங்சு: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு இளம் இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். இதன்மூலம், குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்த சிந்து, ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.

சீனாவில் உள்ள குவாங்சு நகரில், 20வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், "நம்பர்-12' இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, "நம்பர்-8'
இடத்தில் உள்ள சீனாவின் ஷிஜியன் வாங்கை (நம்பர்-8) சந்தித்தார். அபாரமாக ஆடிய சிந்து 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம், குறைந்த பட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்த சிந்து, ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.


மற்றொரு போட்டியின் காலிறுதியில், "நம்பர்-4' வீராங்கனையான இந்தியாவின் செய்னா நேவல், தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் இயான் ஜு பெய் சந்தித்தார்.

இதில் துவக்கம் முதல் பொறுப்பில்லாமல் செயல்பட்ட செய்னா முதல் செட்டை 21-23 என போராடி கோட்டைவிட்டார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சொதப்பிய செய்னா 9-21 என மோசமாக தவறவிட்டார். முடிவில் செய்னா 21-23, 9-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

காஷ்யப் "அவுட்':

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் காஷ்யப், சீனாவின் பெங்யு டுவை (நம்பர்-3) எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 21-16 என கைப்பற்றிய காஷ்யப், இரண்டாவது செட்டை 20-22 என இழந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 15-21 என காஷ்யப் தவறவிட்டார். முடிவில், இந்தியாவின் காஷ்யப் 21-16, 20-22, 15-21 என்ற செட்களில் போராடி தோல்வியடைந்தார்.

Comments