என் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான் - இளவரசன் தாய் அம்சவேணி

என் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான் - இளவரசன் தாய் அம்சவேணிசென்னை: என் மகன் தற்கொலை செய்யவில்லை. அப்படி ஒரு மனநிலையில் அவன் இல்லை. அவன் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை என இளவரசனின் தாயார் அம்சவேணி கூறினார். தர்மபுரியில் இன்று இளவரசன் தாயார் அம்சவேணி நிருபர்களிடம் கூறுகையில், "நான் கடந்த 3-ந்தேதி விலையில்லா மிக்சி, கிரைண்டர் வாங்க நத்தம் காலனிக்கு சென்றேன். அன்று காலை ஏ.டி.எம். சென்டரில் இருந்து பணம் எடுத்து வர சொல்லி இளவரசனை எனது கணவர் அனுப்பினார். அவன் ரூ.2 ஆயிரம் பணத்தை வைத்து கொண்டு மீதி ரூ.7 ஆயிரத்தை எனது கணவரிடம் கொடுத்துள்ளான்.
பின்னர் நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றான். இந்தநிலையில் நான் உறவினர் வீட்டில் இருந்த போது பகல் ஒரு மணி அளவில் எனது மகன் இறந்தது எனது உறவினர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவர்கள் என்னிடம் தகவல் சொல்ல வில்லை. சிறிது நேரம் கழித்துதான் தகவல் சொன்னார்கள். நான் அவன் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அவன் தற்கொலை செய்து கொண்டது போல் தெரிய வில்லை. அவன்தான் அன்று காலையில் எங்களுக்கு நம்பிக்கை சொன்னான். நிலைமை சீக்கிரம் சரியாகிடும்மா என்றான். அவன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இது கொலைதான். அவனை யாரோ கொன்று போட்டிருக்கிறார்கள். திவ்யா பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்ட எதையும் அவன் எடுத்துச் செல்லவில்லை. அவை வீட்டிலேயே உள்ளன. அதனை பார்த்தால் திவ்யாவின் ஞாபகம் அவனுக்கு வரும் என்பதால் நாங்கள் எங்களது சொந்த வீட்டுக்குக் கூட போகவில்லை," என்றார்.

Comments