பண்டைய காலத்தில் இருந்தே, சருமத்தை பராமரிப்பதற்கு மஞ்சள் பயன்பட்டு
வருகிறது. ஏனெனில் இத்தகைய மஞ்சளில் எண்ணற்ற அழகு நன்மைகள் நிறைந்துள்ளன.
மேலும் இதில் ஆன்டி-செப்டிக் பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், சருமத்தில்
ஏற்படும் பிரச்சனைகளுள் முக்கியமான முகப்பரு பிரச்சனையை எளிதில் போக்கலாம்.
அதுமட்டுமின்றி, மஞ்சளைக் கொண்டு, கருமையான சரும நிறம் உள்ளவர்கள், தங்கள்
நிறத்தை வெள்ளையாகவும் மாற்றலாம். அதிலும் இந்த கருமை நிற சருமமானது,
வெப்பமண்டல நாடுகளில் உள்ள மக்களுக்குத் தான் அதிகம் இருக்கும். அந்த வெப்ப
மண்டல நாடுகளில் ஒன்று தான் இந்தியா.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள், தங்கள் நிறத்தை கூட்டுவதற்கு, பல
முயற்சிகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைக்காமல்
இருக்கும். ஆனால், மஞ்சள் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், எளிமையாக
சரும நிறத்தை அதிகரிக்கலாம். அதுவும் மஞ்சளைக் கொண்டு சருமத்தை
பராமரித்தால், உடனே சருமம் பொலிவாவதை உணரலாம். அதனால் தான், இந்து மத
திருமண சடங்குகளில், மஞ்சள் விழா என்ற ஒன்று திருமணத்திற்கு முதல் நாள்
கொண்டாடப்படுகிறது. இவ்வாறு மஞ்சள் விழாவினை மேற்கொண்டால், திருமண நாளன்று
மணப்பெண்ணின் முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.
ஆனால் இந்த மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து
வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி, சருமம் விரைவில்
வெள்ளையாவதை உணரலாம். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால்,
நிச்சயம் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும். சரி, இப்போது சருமத்தை
வெள்ளையாக்கும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!
மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய்
குழம்பு மஞ்சளை நன்கு அரைத்து, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து
கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், இந்த ஒரு முறையினாலே
சருமத்தின் கருமையை போக்கலாம்.
மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்
மஞ்சள் துளை, மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்
போட்டால், விரைவில் சருமம் வெள்ளையாகும். ஏனெனில் இதில் உள்ள மில்க் க்ரீம்
சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கவும், மஞ்சள் தூள் சருமத்தின் கருமை
நிறத்தை போக்கும்.
மஞ்சள் மற்றும் தேன்
மஞ்சள் தூளை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து
கலந்து, கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10
நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம்
பொலிவோடு காணப்படும்.
மஞ்சள் மற்றும் சந்தனம்
சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்பட
வேண்டுமெனில், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தனப் பொடி, 1
டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, அந்த கலவையை
சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்
1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் 1/2
டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து, முகத்தில் தடவி ஊற வைத்து
கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம் வெள்ளையாகவும் காணப்படும்.
மஞ்சள் மற்றும் குங்குமப்பூ
சருமம் வெள்ளையாவதற்கு குங்குமப்பூடன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
பால் ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சரும
கருமை நீங்கி, முகம் உடனே பொலிவுடன் காணப்படும்.
மஞ்சள் ஃபேஸ் ஸ்கரப்
சில சமயங்களில் சருமத்தில் உள்ள கருமை அதிகப்படியான இறந்த செல்கள் சரியாக
நீங்காமல் இருப்பதால் ஏற்படும். எனவே இத்தகைய இறந்த செல்களை முற்றிலும்
போக்குவதற்கு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன்
பால் மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய
வேண்டும்.
மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி
அனைவருக்குமே முல்தானி மெட்டியைப் பற்றி நன்கு தெரியும். அதிலும் முல்தானி
மெட்டி பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்க
வல்லது என்பதும் தெரியும். ஆனால் அந்த முல்தானி மெட்டியை மஞ்சள் தூள்
மற்றும் பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று
காணப்படும்.
Comments