இந்தியாவில்,
மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில்
அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும்,
முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள்
பதிக்கப்பட்டு, 1853ல்,
தந்தி சேவை அறிமுகமானது. 1854ல், தந்தி சேவைக்கு
தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், "இந்திய தந்தி சட்டம்'
உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த
நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப்
பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில்,
"தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும்' என, மத்திய அரசு
அறிவித்தது. "மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை
நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல்,
சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல
தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு
பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய
அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம்
தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க,
சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ""இன்று
நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி
சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு
பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.
Comments