அனல்மின் நிலைய உற்பத்தி அதிகரிப்பு: 11 மெகாவாட்டை தாண்டியது

சென்னை: தமிழகத்தில், நேற்று அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, நேற்று, மொத்த மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.

ஜூன் மாதம் முதல், தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், நீர் மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தி சூடு பிடித்து உள்ளது. அதே நேரத்தில், காற்றாலைகள் மூலம், தினசரி, 2,000 முதல், 2,500 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்றாலை, அனல் மின் உற்பத்தி நிலையங்கள், முழு அளவில் இயங்குவதால், தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தி, நேற்று முன் தினம், 11,032 மெகாவாட், நேற்று காலை நிலவரப்படி, 11,003 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

அனல் மின் நிலையங்கள்:

எண்ணூர், வடசென்னை, வல்லூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய, ஐந்து இடங்களில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த உற்பத்தி திறன், 2,970 மெகாவாட். இந்த, ஐந்து இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் வளாகத்தில், கூடுதலாக, புதிய அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக, அனல் மின் நிலையங்களிலிருந்து, தினசரி, 2,700 முதல், 3,000 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி, அனல் மின் நிலையத்திலிருந்து, 2,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில அனல் மின் நிலையங்களில், பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்து, பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்கள், முழு அளவில் இயங்கினால், தேவையான அளவு மின்சாரம் கிடைக்கும். தற்போதைய நிலையில், அதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேலும், மின் பற்றாக்குறையின் அளவும் குறையும் என, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Comments