''நபிகளை இழிபடுத்தியதற்கு தண்டனை தான் சாண்டி பேரழிவு''-ட்விட்டரில் மோதல்

கெய்ரோ: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்ததால் தான் அமெரிக்காவை சாண்டி புயல் தாக்கியதாக முஸ்லிம் தலைவர்கள் சிலர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

நபிகளை இழிவுபடுத்தியா படம் எடுக்கிறீர்கள்?

நபிகள் நாயகத்தையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற பெயரில் படம் எடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். அவர் அப்படி நபிகளை இழிவுபடுத்தி படம் எடுத்ததால் தான் அமெரிக்காவை சாண்டி புயல் தாக்கியது என்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.


நபிகளை இழிவுபடுத்தினா இறைவன் சும்மாவிடுவானா?

எகிப்தைச் சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் டுவீட்: "அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் பழிவாங்கினான் என்பதே எனது கருத்து."

கடவுளே ஐ.நா. கட்டிடத்தை தரைமட்டமாக்கிவிடு!

கொனீமின் டுவீட்டைப் பார்த்த ஒருவர் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சாண்டி என்னும் புனிதப் புயல் என்று கூறியுள்ளார். அவரது டுவீட்: அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர்போன ஐ.நா. சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். அது தான் சாண்டி.

சாண்டி ஏன் தாக்கியது தெரியுமா?

சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சாண்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஓவராப் பேசாதீங்க சாண்டிக்கு முஸ்லிம்களும் தான் பலியாகி இருக்கிறார்கள்...

அமெரிக்காவைத் தாக்கிய சாண்டி புயலில் சிக்கி பலியானவர்களில் முஸ்லிம்களும் அடக்கம். அதனால் ஓவராகப் பேசக் கூடாது என்று பல முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது என்றும் மேலும் பலர் தெரிவித்துள்ளனர்.

Comments