பெங்களூரில் பல இடங்களில் போராட்டம்.. போக்குவரத்து கடும் பாதிப்பு

 Cauvery Protesters Cause Traffic Snarl In Bangalore பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுவதை எதிர்த்து பெங்களூர் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னட அமைப்பினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதே போல
மதசார்பற்ற ஜனதா தளம் சார்பிலும் பெங்களூரில் இன்று பல்வேறு
போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய சாலையில் சிபிஐ அலுவலகத்துக்கு எதிரே போராட்டம் நடத்திய இந்தக் கட்சியின் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தனர்.
பாஜகவை தவிர்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் மெளரியா சர்க்கிள் காந்தி சிலை முன் தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.
மேலும் பல்வேறு கன்னட அமைப்புகளும் பெங்களூர் நகர் முழுவதும் இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு கர்நாடக திரைப்படத்துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அம்பரீஷ் பங்கேற்பு:
பசவனகுடியில் இருந்து பேரணியாக செல்லப் போகும் கன்னட ரக்ஷன வேதிகே நடத்தும் போராட்டத்தில் நடிகர் அம்பரீஷும் கலந்து கொண்டுள்ளார்.
மைசூர் ரோட்டில் இன்று காலை முதலே டயர்களை எரித்துப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டது. அதே போல பெங்களூரில் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வரும் போராட்டங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிக்பேட்டை, நாகர்பேட், கே.ஆர்.மார்கெட், எஸ்.பி.ரோடு ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன.
கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நடத்தும் பேரணியால் பெங்களூர் பசவனகுடி, சஞ்ஞன் ராவ் சர்க்கிள், மினர்வா சர்க்கிள், ஜே.சி ரோடு, கார்ப்பரேசன் சர்க்கிள், நிருபதுங்கா ரோடு உள்பட தெற்கு பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து முழுமையாக முடங்கவுள்ளது.

Comments