சேது சமுத்திரத் திட்டத்தை எம்.ஜி.ஆரே. விரும்பினார்... கருணாநிதி

 Mgr Wanted Sethu Canal Project Says Karunanidhi சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தீவிரம் காட்டினார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேது சமுத்திர திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண்டாடும்படி 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போதே ஆணையிட்டு, அதனை நிறைவேற்றியவர்கள் நாம்.

முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1985-1990-ம் ஆண்டுக்கான 7-வது ஐந்தாண்டு திட்டத்தை சமர்ப்பித்தபோது சேது சமுத்திர திட்டம் மன்னார் வளைகுடாவை பாக். ஜலசந்தியுடன் இணைப்பதற்கு பாம்பனுக்கு அருகே உள்ள குறுகிய பகுதியில் கப்பல் போக்குவரத்துக் கால்வாயை வெட்டுவதற்கு வகைசெய்யும் திட்டம் என்றும், பயண தூரம், பயண நேரம் ஆகியவை குறையும் என்றும் எடுத்துக்கூறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
1981-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டம் பற்றி ஆராய எச்.ஆர்.லட்சுமி நாராயணன் தலைமையில் அமைந்த குழு தமிழகத்திற்கு வந்தபோது, எனது கோரிக்கையினை ஏற்று, அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அந்த குழுவிடம் சேது சமுத்திர திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அந்த குழு மதுரைக்கும், நெல்லைக்கும் சென்ற போது, கழகத்தின் சார்பில் வைகோ அந்த குழுவினரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
நாடாளுமன்ற விவாதங்களின் போதும் முரசொலிமாறனும், அவரை தொடர்ந்து வைகோவும் வாதாடி, 2004-ம் ஆண்டு தேர்தலில் கழகம் ஆதரவு தெரிவித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியிலே அமைந்தபோது கப்பல், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டி.ஆர்.பாலு இத்திட்டத்திற்கு முழு வடிவம் தந்து மிகவேகமாக திட்டப்பணிகள் நடந்தன.
இந்த திட்டம் எவ்வளவு முக்கியமான திட்டம், அது நிறைவேற்றப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக தான் எடுத்துக்காட்டினேன்.ஆனால் இந்த திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசின் முதல்வரே உச்சநீதிமன்றத்திலே, அதுவும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்து திட்டத்தின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அறிக்கை கொடுத்திருப்பது முறைதானா என்பதை அரசியல் கட்சி வேறுபாடுகளை எல்லாம் மறந்து, தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வை ஒருக்கணம் எண்ணி பார்த்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Comments