ரூ. 3 கோடியில் போலீஸாருக்கு பருத்தி மெத்தை, போர்வை, தலையணை -ஜெ. உத்தரவு

 Jaya Announces Allot Bedsheets Blankets To Armed Police சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உள்ள சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை வளாகங்களில் குடியிருக்கும் காவலர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படை வளாகங்களில் குடியிருக்கும் காவலர்களின் நலன்களை பேணி பாதுகாக்கும்
வகையில் 2,055 ஈரடுக்குப் படுக்கைகள் மற்றும் 4,110 பருத்தி மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை 3 கோடி ரூபாய் செலவில் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படியினை 200 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 5 கோடியே 78 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
இது மட்டுமல்லாமல், காவல் துறையினருக்கு வழங்கும் சலுகைகள், சிறைத் துறையினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், காவல்துறையினருக்காக திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை சிறைத்துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் காவல்துறை பணியாளர்களுக்கு வழங்கியது போல், சிறைத்துறை பணியாளர்களுக்கும், சலவைப் படியை 200 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 3,455 சிறைத்துறை பணியாளர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 20 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணியாளர்களின் பணிகள் மேலும் சிறக்க வழிவகுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments