ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ. 2 லாபம் அடிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. விலையை குறைப்பார்களா?

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.60 வரை குறைக்கலாம். ஆனால், அதைக் குறைக்காமல் லாபம் அடித்து வருகின்றன மத்திய எண்ணெய் நிறுவனங்கள்.

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால் உடனடியாக விலையை உயர்த்தும் இதே எண்ணெய் நிறுவனங்கள், இப்போது விலை குறைந்துள்ள நிலையில், விலையைக் குறைக்காமல் இழுத்தடித்து வருகின்றன.
இப்போதைய நிலவரப்படி ஒரு லிட்டருக்கு மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2 வரை லாபம் கிடைத்து வருகிறது.
இதையடுத்து விலையை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகைகள் வலுவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து லிட்டருக்கு ரூ. 1.60 வரை விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
ரூ. 2 வரை குறைத்துவிட்டால், அடுத்து ரூபாய் மதிப்பில் சிறிய சரிவு ஏற்பட்டால் கூட விலையை உயர்த்த வேண்டி வரும் என்பதால் 40 பைசா லாபத்தை வைத்துக் கொண்டு விலையை ரூ. 1.60 மட்டும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம்.

Comments