அண்ணா ஆர்ச்சைப் பார்த்து ஆய்வு செய்த ஜெ.

 Jaya Inspects Anna Arch Renovation சென்னை: சென்னை அண்ணா நகர் நுழைவாயிலில் கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டு, சமீபத்தில் உடைக்க முயற்சித்து முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தற்போது அந்தரத்தில் தொங்குவது போல பரிதாபமாக காட்சி தரும் அண்ணா வளைவை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதைப் பணிக்காக மிகவும் வலுவான முறையில் கட்டப்பட்டு, சென்னை மக்களின் மனில் நீங்காத இடம் பெற்றிருந்த, சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா வளைவை நீக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி இந்த வளைவை இடிக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் இதை இடிக்க முடியவில்லை. இதையடுத்து இடிப்புப் பணியை நிறுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று 80வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை அவரது முகப்பேர் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்திய ஜெயலலிதா வழியில் அண்ணா வளைவைப் பார்வையிட வந்தார்.
சுமார் கால் மணி நேரம் அங்கிருந்த ஜெயலலிதா, நவீன முறையில் இந்த வளைவை திரும்பக் கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அண்ணா பவள விழா நினைவு வளைவை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. அதை பார்த்து ஆய்வு செய்யவே இன்று இங்கு வந்தேன். 120 நாட்களுக்குள் ஆர்ச்சை சீரமைக்கும் பணி முடிவடையும் என்றார்.

Comments