ஈரோடு: கிணத்தைக் காணோம் என்று வடிவேலு புகார் கூறிய கதையாக (என்னதான்
பழைய ஜோக்காக இருந்தாலும் இப்ப வரைக்கும் இதுதான் பொருத்தமா இருக்கு)
மின்சாரத்தைக் காணவில்லை என்று கூறி கோபிச்செட்டிப்பாளையம் அருகே கிராம
மக்கள் 50 பேர் டிஎஸ்.பியிடம் போய் புகார் கூறி போலீஸாரை
டென்ஷனாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின் தடைதான்,
மின் பற்றாக்குறைதான். கரண்ட் இல்லை, கரண்ட் இல்லை என்பதே
இப்போதைக்கு
தமிழகத்தின் 'கரண்ட் அபயர்ஸ்' ஆக உள்ளது.
இந்த நிலையில்,
கோபிச்செட்டிப்பாளையம் அருகே நம்பியூர் பகுதியில் மின்சாரம் காணமால் போய்
விட்டதாக கூறி ஒரு 50 பேர் கிளம்பிப் போய் கோபி டிஎஸ்பியைப் பார்த்து
புகார் கொடுத்து காவல்துறையினரை டென்ஷனாக்கியுள்ளனர்.
இதுகுறித்து
அந்த ஊர் பொதுமக்கள் கூறுகையில், நம்பியூர், அம்பேத்கர் நகர்,
வெள்ளாளபாளையம், ரங்கம்பாளையம், சூரியபாளையம், குப்பிபாளையம், கெடாரை
உள்பட, 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சில வாரங்களாக, 14 மணி நேரம்
மின்சாரத்தை காணவில்லை.
இரவு நேரத்திலும் மின்சாரம் அடிக்கடி காணாமல்
போவதால், எங்களை கொசுக்கள் நிம்மதியாக தூங்க விடுவதில்லை. நோய் பரவும்
அபாயம் ஏற்படுகிறது. மின்சாரத்தை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று படு
சீரியஸாகவே கூறினர்.
கொங்கு நாட்டுக்காரவுகளுக்கு ரொம்பத்தாய்யா குசும்பு...!
Comments