இப்போதைக்கு உலகிலேயே மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு லஷ்கர் ஏ தொய்பா தான்: அமெரிக்கா
வாஷிங்டன்: அல் கொய்தாவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்திவிட்ட நிலையில்,
பாகிஸ்தானின் ஆதரவோடு இயங்கும் லஷ்கர் ஏ தொய்பா தான் இப்போதைக்கு
உலகிலேயே மிக ஆபத்தான தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்க உளவுப் பிரிவான
சிஐஏவின் முன்னாள் ஆலோசகர் புரூஸ் ரெய்டல் கூறியுள்ளார்.
இப்போது
வாஷிங்டனில் உள்ள புரூக்ளின் வெளிநாட்டுக் கொள்கை ஆலோசனை அமைப்பின்
மூத்த ஆய்வாளராக உள்ள அவர் டெய்லி பீஸ்ட் பத்திரிக்கையில்
எழுதியிருப்பதாவது:
நியூயார்க்கில் நடந்த செப்டம்பர் 11
தாக்குதலுக்குப் பிறகு உலகளவில் நடந்த பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல்
லஷ்கர் ஏ தொய்பா நடத்திய மும்பை தாக்குதல் தான். பாகிஸ்தானின் பஞ்சாப்
மாகாணத்தைச் சேர்ந்த இந்திய எதிர்ப்புத் தீவிரவாத இயக்கமாக மட்டுமே இருந்த
லஷ்கர் ஏ தொய்பா, இப்போது இந்துக்கள் வாழும் இந்தியா, யூதர்கள் வாழும்
இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒரு தீவிரவாத இயக்கமாக
உருவெடுத்துள்ளது.
மும்பை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த சயீத்
சபியூதீன் அன்சாரி என்ற அபு ஜுண்டால் கைது செய்யப்பட்டது தீவிரவாதத்துக்கு
எதிரான இந்தியாவின் போரில் முக்கியமான நடவடிக்கையாகும்.
மும்பை
தாக்குதலை நடத்திய லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகளை பாகிஸ்தான் உளவுப்
பிரிவான ஐஎஸ்ஐ நேரடியாகக் கட்டுப்படுத்தியது குறித்து அபு ஜூண்டால் நிறைய
தகவல்களைத் தந்துள்ளான். அவன் சொல்வது உண்மையாக இருந்தால்,
அமெரிக்கர்களைக் கொல்ல ஐஎஸ்ஐ நேரடியாகவே உத்தரவிட்டது உறுதியாகிறது.
ஐஎஸ்ஐக்கும்
செளதி உளவுப் பிரிவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதே போல செளதி
அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனாலும், அபு
ஜுண்டாலை கைது செய்து இந்தியாவிடம் செளதி அரேபியா ஒப்படைத்தது மிகப் பெரிய
உதவியாகும்.
லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு செளதி அரேபியா
மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்களிடம் இருந்து தான்
பெரும்பாலான நிதி உதவி வந்து கொண்டுள்ளது. இப்போது அந்த அமைப்புக்கு
எதிராக செளதி அரேபியா நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் அந்த அமைப்புக்கு
வரும் நிதியுதவியும் பாதிக்கப்படும்.
ஆனால், பாகிஸ்தானில் அந்த
நாட்டு ராணுவம் மற்றும் உளவுப் பிரிவின் உதவியோடு லஷ்கர் ஏ தொய்பா
அமைப்பு மிகச் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தெற்காசியா,
வளைகுடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் கால் பதித்துவிட்டது.
அல்
கொய்தாவை ஓரளவுக்கு ஒடுக்கிவிட்ட நிலையில், பாகிஸ்தானின் ஆதரவோடு
இயங்கும் லஷ்கர் ஏ தொய்பா தான் இப்போதைக்கு உலகிலேயே மிக ஆபத்தான
தீவிரவாத அமைப்பு.
Comments