இலங்கை மீது இந்தியா கடும் சீற்றம்?

கொழும்பு: ’கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அமலாக்க யோசனையை அமெரிக்காவிடம், இலங்கை அரசு நேரடியாகக் கையளித்தது குறித்து இந்தியா கடும்  சீற்றமடைந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது விஷயத்தில் இலங்கை மீதான தமது அதிருப்தியை டெல்லி, இராஜதந்திர  வழிமுறைகளில் தெரிவித்திருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் மூலமாக  தெரியவ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,அண்மையில் அமெரிக்கா  சென்றிருந்தார்.அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை  சந்தித்து,நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனீவா மாநாட்டின்  தீர்மானங்களுக்கு இசைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான இலங்கை அரசின்  திட்டவரைவை,அவரிடம் கையளித்திருந்தார்.

ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமலாக்க யோசனைகள், படிப்படியாக  நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம்  உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்காவுடன் நேரடியாகவே  தொடர்புகொண்டு இவ்வாறான விஷயங்களை,இலங்கை அரசாங்கம் கையாள்வது குறித்து  இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான  தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட போது, அதனை மென்மைப்படுத்த  இந்தியா பெரிதும் உதவியது. ஆனால், இப்போது இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு  அமெரிக்காவுடனான விஷயங்களை, நேரடியாகவே கையாள்வதற்குக் கொழும்பு  முற்பட்டிருப்பது டெல்லிக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்த தமது அதிருப்தியை இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கை அரசாங்கத்துக்கு  இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும் இலங்கை அரசிடமிருந்து இதற்கான பிரதிபலிப்புக்கள் எதுவும்  வெளிப்படுத்தப்படவில்லை.அண்மைக்காலமாக இந்தியாவைப் பறக்கணிக்கும் வகையில்  இதனைவிட மேலும் பல விஷயங்களில் இலங்கை செயற்பட்டுவருவது தொடர்பாகவும்  இந்தியா அதிகளவு கவலையடைந்திருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Comments