ஜெ. வின் கோழைத்தனம்...

மீண்டும் ஒரு இடைத்தேர்தல் கூத்தை சந்திக்கவிருக்கிறது தமிழகம்.  பொதுவாக, இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் வெற்றி பெரும் (மக்கள் பலத்தால் அல்ல, ஆளும் பலத்தால்), இது எழுதப்படாத ஒரு சட்டமாக தமிழகத்தில் இதுவரை நடந்து வருகிறது.  இதில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்ற பாகுபாடு கிடையாது. இந்த இரு கட்சிகளும் எதில் ஒற்றுமையாக இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது முழு அதிகாரத்தையும் பயன் படுத்தும் விதத்தில் இவ்விரு கட்சிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  தி.மு.க. ஆட்சி இருந்தாலும் சரி, அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சரி குறுக்கு வழியில் எப்படி வெற்றி பெறுவது என்று இவைகளுக்கு தெரியும்.  தி.மு.க. ஆட்சியில் இருக்கும் பொது வரும் இடைத்தேர்தலில், அந்த கட்சி வெற்றி பெற சில அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கும்.  அப்போது எதிர்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. அதை கடுமையாக விமர்சிக்கும், அதன் ஆதரவு ஊடகங்கள் தி.மு.க.வின் செயலை வன்மையாக கண்டித்து பக்கம், பக்கமாக எழுதும்.

அதே போல, அ.தி.மு.க. ஆட்சியில் வரும் இடைத்தேர்தல் பணிக்கு, அந்த கட்சி வெற்றி பெற தன் முழு அதிகரத்தையும் பயன் படுத்தும்.  அதை தி.மு.க. விமர்சிக்கும்.  இப்படிதான் கடந்த பல இடைத்தேர்தல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது.  ஆனால், தற்பொழுது நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த, நடக்க போகிற இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது.  தன் சொந்த மக்கள் செல்வாக்கின் மேல் அந்த கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்பது போல உள்ளது அதன் செயல்பாடுகள்.  பொதுவாக, இடைதேர்தல் என்பது, நடக்கும் ஆட்சிக்கு மக்கள் தரும் இடைக்கால மதிப்பெண் தான்.  ஆனால், அ.தி.மு.க.விற்கு தான் நடத்தும் ஆட்சியின் மேல் நம்பிக்கை இல்லை.  தனது அரசு மக்கள் நல பணிகளை நல்ல முறையில் நடைமுறை படுத்திருந்தால், அ.தி.மு.க.விற்கு இந்த இடைத்தேர்தல் பயம் வராது.

ஆனால், கடந்த 11 மாதகால ஆட்சியில், மக்கள் மிகவும் பாதிப்படையும் விதமான பல நிர்வாக திறனற்ற நடவடிக்கைகளால் (பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் பல) அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை.  ஆகவே தான், அ.தி.மு.க. அரசு மக்களை நேர் வழியில் சந்திக்க பயப்படுகிறது.  சங்கரன்கோவில் பாணியை இந்த புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும் புகுதிள்ளது இதற்க்கு ஒரு உதாரணம்.  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில்கூட அ.தி.மு.க.விற்கு சற்று குறைவான பயம்தான் இருந்திருக்க வேண்டும் (தேர்தல் பணிக்கு நியமனம் செய்த ஆட்களின் எண்ணிக்கையை பார்த்தல் புரியும்).  ஆனால், இந்த புதுக்கோட்டை இடைத்தேர்தல், அ.தி.மு.க.விற்கு மிகுந்த பயத்தை உண்டாக்கி இருக்கிறது.  எனவேதான், இந்த சாதாரண ஒரு இடைத்தேர்தலுக்கு 32 அமைச்சர்கள் கொண்ட ஒரு மெகா பணி குழுவை நியமனம் செய்துள்ளார் ஜெ.

பாவம், மொத்த அமைச்சர்கள் 33 பேர்தான் (ஜெ.வையும் சேர்த்து).  அதில், 32 பேரை இந்த இடைத்தேர்தல் பணிக்கு புதுக்கோட்டை நோக்கி அனுப்பி இருக்கிற ஜெ.  பாவம், சும்மா சும்மா இடைத்தேர்தல் வந்து ஜெ.யை மிகவும் பயமுறுத்துகிறது.  இப்படி, பயந்து தனது முழு அதிகார கூட்டத்தை அங்கு அனுப்பி வைப்பது, அ.தி.மு.க.வின் கோழைத்தனத்தை காட்டுகிறது.  ஜெ. ஒரு தைரியமான பெண் என்பதை இந்த விசயத்தில் யாரும் ஒத்துக்கொள்ள முடியாது.  இப்படி தன் அரசாங்கம் முழுமையும் இந்த ஒரு சாதாரண இடைத்தேர்தலில் பயன் படுத்தினால் பின் எப்படி அரசு சிறப்பாக செயல்படும்?  மக்கள் நல பணிகள் தனது ஆட்சியில் நடைபெற்று இருந்தால், அதை மட்டுமே ஜெ. நம்பி இந்த இடைத்தேர்தலில் போட்டியிற்றுக்கலாம்.  தனது ஆட்சியின் லட்சணம் ஜெ.க்கு நன்கு தெரிந்திருக்கிறது.  அதனால்தான் தனது முழு அரசாங்க படைபலத்தையும் இந்த இடைத்தேர்தலில் ஜெ. களம் இறக்கி உள்ளார்.  இது, ஜெ.யின் கோழைத்தனமான செயல்தான்.  பாவம், இடைத்தேர்தல் என்றால் ஜெ.க்கு இவ்வளவு பயம் கூடாது.

புதுக்கோட்டை மக்கள் என்ன முடிவெடுத்தாலும், இங்கு அ.தி.மு.க.தான் வெற்றிபெறும்.  இது, அதிகார பலம், பண பலம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கரிசனத்தின் வெளிப்பாடு.  இதை யாராலும் தடுக்க முடியாது.  புதுக்கோட்டை மக்களுக்கு, தங்கள் சுய விருப்பத்தை இந்த இடைத்தேர்தலில் வெளிபடுத்த எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது.

Comments