மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் மற்றும் அஜீத் பவாருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த செயலால் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. இதனால் இவை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் தேவேந்திர பட்னவீஸ் திடீரென முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். துணை முதல்வராக அஜீத் பவார் பதவியேற்றுள்ளார். யாருமே எதிர்பாராத வகையில் எல்லாமே காலையில் நடந்தேறியுள்ளன.
இந்த திடீர் செயலால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. பல விமர்சனங்களும் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் ஆளுநர் மீது தற்போது இந்த மூன்று கட்சிகளின் கோபமும் திரும்பியுள்ளன. ஆளுநர் கோஷியாரி அனைத்து விதிகளையும் மீறி விட்டதாக சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலும் கூட ஆளுநர் ரகசியமாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் பட்னவீஸுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இந்த 3 கட்சிகளும் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. இருப்பினும் வழக்கு தொடரப்படுமா என்பது குறித்து இதுவரை 3 கட்சிகள் சார்பிலும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை இல்லை. முன்னதாக இன்று காலை 5.47 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து அதிரடியாக 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.
Comments