மும்பை: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தர காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்து சஸ்பெண்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதால் மூன்று கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி அரசு, உண்மையில் சிவசேனா தலைமையில் இருக்கும் என்பது இப்போது தெளிவாகி உள்ளது.
என்.சி.பி மூத்த தலைவர் நவாப் மாலிக் இன்று கூறுகையல் "சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான பிளவு முதல்வர் பதவிக்கு மேல் இருந்தது. எனவே நாங்கள் முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை. முதல்வர் சிவசேனாவிலிருந்து வருவார்" என்று கூறினார்.
இதனிடையே சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பாரா அல்லது கட்சியில் வேறொருவரை இந்த பதவிக்கு பரிந்துரைப்பாரா என்பது குறித்து சிவசேனா இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை உத்தவ் தாக்கரே முதல்வராக விரும்பாவிட்டால் சிவசேனா சட்டமன்றக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Comments