சென்னை : ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், அரசியல் கட்சி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷனை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
போலி வாக்காளர்களை நீக்க திமுக எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. போலி வாக்காளர் குறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு போலி வாக்காளர்கள் இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர். தொடர்ந்து இவ்வழக்கை முடித்து வைப்பதாகவும் ஐகோர்ட் தெரிவத்துள்ளது.
Comments