லக்னோ : பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும்போதும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அட்டை கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு மாணவன் ஆதார் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் போனால் அதற்கு அவர் பயிலும் பள்ளியின் முதல்வர்தான் பொறுப்பு என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனுமதி கார்டுடன், ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்கு எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என உ.பி., அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments