சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் பரிந்துரை கடிதங்களை விட, தி.மு.க., - எல்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் பரிந்துரைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக, கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.இது குறித்து, கோட்டை வட்டாரங்களில் கூறியதாவது:துவக்கத்தில், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையை கடுமையாக விமர்சித்து வந்தார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின். சட்டசபையிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரின் செயல்பாடுகளையும், தி.மு.க., கடுமையாக எதிர்த்து வந்தது. பல முறை சபை நடவடிக்கைகளை வெளிநடப்பு செய்து விட்டு வெளியேறினார்.
மாறும் காட்சி:
தற்போது நடக்கும் மானிய கோரிக்கை மீதான விவாத கூட்டங்களில், ஒவ்வொரு நாளும் பெயருக்கு கூட்டம் நடத்தப்படுவது போல தெரிகிறது. சபாநாயகர் தனபால் துவங்கி எல்லோருமே, ஒருவித உடன்பாட்டுக்கு வந்த செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, சபையில் கடுமையாக எதிர்ப்பது போல காட்டுவதும், பின், அமைதியாக உட்காருவதுமாக இருந்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தற்போது, அந்த நிலையில் இருந்தும் மாறி விட்டனர். அவ்வப்போது மட்டும், சும்மா பெயருக்கு அ.தி.மு.க.,வை விமர்சிப்பதோடு, சபையில் அமைதியாகி விடுகின்றனர்.அதற்கு காரணம், அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க.,வினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம். இதே மனநிலையில் இருக்கும் முதல்வர் பழனிச்சாமியும், அவரது அமைச்சரவை சகாக்கள், தி.மு.க.,வினரை மதித்து நடக்குமாறு சொல்லிவிட்டார். இதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எல்லா அமைச்சர்களுக்கும் பரிந்துரை கடிதம் கொடுத்து, நிறைய சாதித்துக் கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை ஏற்கப்படுவதில்லை. இது அ.தி.மு.க.,வினர் மத்தியில் நிறைய சிக்கலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. சில அமைச்சர்களிடம் காரியங்களுக்காக செல்லும் அ.தி.மு.க.,வினர், அமைச்சர்களிடம் வெளிப்படையாகவே சண்டை போடுகின்றனர். தி.மு.க.,வோடு ஏற்பட்டிருக்கும் உடன்பாடு குறித்தும், அ.தி.மு.க.,வினர் எரிச்சலை வெளிப்படுத்துகின்றனர்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
Comments