OneIndia News : டெல்லி: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு உதவ வேண்டும் என்று ராஜ்யசபாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார். தமிழக வெள்ள பாதிப்பு குறித்த விவாதத்தின் போது ராஜ்யசபாவில் இன்று கனிமொழி பேசியதாவது: தமிழகத்தில் மிக மோசமான மழை வெள்ளத்துக்கு பல லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தாம்பரம், வண்டலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.மக்கள் நம்பிக்கையற்று போயுள்ளனர்.. மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை. மாணவர்கள் 2 வார காலத்துக்கும் மேலாக பள்ளிகளுக்குச் செல்லவில்லை. முப்படையின் மீட்பு பணிகள் பாராட்டுக்குரியது. இந்த நேரத்தில் தமிழக அரசை நாங்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கவில்லை. தமிழக அரசுடன் இணைந்து தி.மு.க.வும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது.
வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போதுமான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து நாடாளுமன்ற குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது... இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
Comments