OneIndia News : சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி திமிர்த்தனமாக பேட்டியளித்துள்ளார். சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெருமழை வெள்ளத்தால் அழிந்து கடல்போல காட்சி தருகின்றன. சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
ஏற்கனவே பெய்த பெருமழையில் இருந்து மீள முடியாத நிலையில் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ள சேதங்களுக்கு தமிழகத்தை ஆண்ட தி.மு.க, அ.தி.மு.க அரசுகளே காரணம். ஆகையால் மழைவெள்ள சேதத்தை மாநில அரசுதான் எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு மழை வெள்ள நிவாரண நிதி வழங்கக் கூடாது என்று கூறினார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.
Comments