டெல்லி: டெல்லியில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்திருப்பது கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது மின் தேவை என்பது 13,500 மெகாவாட் அளவாக உள்ளது.
அடுத்த ஆண்டில் இது 14,500 மெகாவாட்டாக அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எண்ணூர்; உடன்குடி; உப்பூர் ஆகிய இடங்களில், புதிய அனல் மின்
நிலையங்கள் அமைக்க முடிவு செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி
ஆட்சி இருந்ததால் தமிழக மின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
மின் திட்டங்கள் முடக்கம்
இதனால் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே முடங்கின. மேலும் தமிழக
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு, மின் வழித்தடம், மத்திய மின்
நிலையங்களில் கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு போன்றவற்றிலும் தமிழகம்
புறக்கணிக்கப்பட்டே வருகிறது.
மோடி அரசுடன் நல்லுறவு
இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி பிரதமராக பதவி
ஏற்றார். புதிதாக அமைந்த மத்திய அரசுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் வகையில்
முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து
பேசினார்.
டெல்லி மாநாடு
இந்நிலையில் டெல்லியில் மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு நேற்று
நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,
எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, மின் வாரிய தலைவர் ஞானதேசிகன்
உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.
நத்தம் புறக்கணிப்பு
ஆனால் திடீரென மின் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்க வில்லை.
தூத்துக்குடி தேர்தல்..
இதற்கு காரணம் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தூத்துக்குடி மேயர் தேர்தல்
பொறுப்பாளராக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இருக்கிறார்.
இதனால்தான் அவர் பங்கேற்கவில்லையாம். அதாவது தமிழக மின் திட்டங்களை விட
தூத்துக்குடி மேயர் தேர்தல்தான் முக்கியம் என்று நத்தம் கருதிவிட்டதாலேயே
அவர் பங்கேற்கவில்லையாம். இந்த செய்தி பொதுமக்களிடம் கடுமையான அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
Comments