இசையுலகில் வெற்றிடத்தை ஏற்படுத்திய ஸ்ரீநிவாஸ் மறைவு

சென்னை: மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மரணம் இசையுலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டதாக, தலைவர்களும், இசைக்கலைஞர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

பிரபல மாண்டலின் இசைக்கலைஞர் உப்பலப்பு ஸ்ரீநிவாஸ் (45).
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கடந்த 1969ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டம் பாலகோலில் பிறந்தார். தனது 6வது வயதில் மாண்டலினை கையில் எடுத்தவர் ஸ்ரீநிவாஸ். அவரது திறமை கண்ட அவரது தந்தை சத்யநாராயணா, தனது குரு ருத்ரராஜூ சுப்பராஜூவிடம் ஸ்ரீநிவாசை ஒப்படைத்தனர். ருத்ரராஜூவுக்கு மாண்டலின் இசைக்கத் தெரியாது என்பதால், அவர் பாடுவதை ஸ்ரீநிவாஸ் தனது மாண்டலினில் இசைத்து பயிற்சி பெற ஆரம்பித்தார். குருவின் முயற்சியில் ஸ்ரீநிவாசிஸ் திறமை மேம்பட ஆரம்பித்தது. மாண்டலின் ஸ்ரீநிவாசின் முதல் மேடைக் கச்சேரி கடந்த 1978ம் ஆண்டு குடிவாடா என்ற இடத்தில் நடந்த தியாகராஜ ஆராதனை விழாவில் நடந்தது. தொடர்ந்து 1981ம் ஆண்டு சென்னையில் கச்சேரிகளை நடத்தத்துவங்கினார் ஸ்ரீநிவாஸ். 1983ம் ஆண்டு பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அவரை மீண்டும் மீண்டும் மாண்டலின் வாசிக்கக்கேட்டது அவரது திறமைக்குச் சான்று. ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா, சனாதன சங்கீத புரஷ்கார், தமிழக அரசின் ஆஸ்தான வித்வான், சங்கீத பால பாஸ்கரா, ராஜிவ் காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது உள்ளிட்ட விருதுகளை ஸ்ரீநிவாஸ் பெற்றுள்ளார். இவர் கடந்த 1994ம் ஆண்டு ஸ்ரீ என்பவரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உண்டு. கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீநிவாசுக்கு மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்தது. அவர் உடல்நலம் தேறி வரும் வேளையில், சிகிச்சை பலனின்றி, சென்னையில் இன்று அவர் காலமானார்.

ஸ்ரீநிவாசின் துவக்க காலத்தில் அவர் மாண்டலினை தேர்ந்தெடுத்ததற்காக பலர் அவரை கேலி பேசினர். ஆனால் அதற்கு தனது மாண்டலினால் பதில் கொடுத்தவர் ஸ்ரீநிவாஸ் என்கிறார் 7 வயதில் மேற்கத்திய இசையை ஸ்ரீநிவாஸ்க்கு அறிமுகப்படுத்திய வாசு ராவ்.  

நாளை இறுதிச்சடங்கு:

இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் இறுதிச்சடங்கு, நாளை மாலை பெசன்ட் நகரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில், அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இசை பிரபலங்கள், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். கல்லீரலில் ஏற்பட்ட தொற்று, அவரின் மரணத்திற்கு காரணம் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்:


மாண்டலின் கலைஞர் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தனது இரங்கல் செய்தியில், இசைக்கு மாண்டலின் கலைஞர் ஸ்ரீநிவாசின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்களிப்பு நினைவு கூறத்தக்கது. இந்த காரணங்களால் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

கவர்னர் ரோசய்யா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தனது மாண்டலின் இசையால் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தவர் ஸ்ரீநிவாஸ். இளம் வயதில் மரணம் அவரை தழுவி விட்டது. ஸ்ரீநிவாஸ் மரணம் கர்நாடக இசை உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஸ்ரீநிவாஸ் மரணம் கர்நாடக இசை உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஸ்ரீநிவாஸ் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏ.ஆர். ரகுமான்:

ஸ்ரீநிவாஸின் மரணச் செய்தி, என்னை மிகவும் பாதித்து விட்டது. எல்லாம் வல்ல இறைவன், அவருக்கு அந்த உலகத்திலும் பெருமகிழ்ச்சியை வழங்கட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு மட்டுமல்லாது, இளைய தலைமுறையினர் பலருக்கும், தங்களுடைய குழந்தை பருவத்தில் இசை கற்க உத்வேகமாய் இருந்தவர்.

நடிகை குஷ்பூ:

திறமைகள் பல உடையவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். அவரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

பாடகர் ஸ்ரீனிவாஸ்:

வாழ்க்கை மிக கொடூரமானது. ஒரு இசைமேதை, இளம்வயதிலேயே இயற்கை எய்தியுள்ளார். அவர் இருந்திருந்தால், இசை உலகில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார்.

பாடகி சின்மயி:

சிறுவயதிலேயே இசை மேதையாக திகழ்ந்தவர் ஸ்ரீநிவாஸ். அவருக்கு மரணம் என்பது துரதிருஷ்டவசமானது.

பாடகி ஸ்வேதா மோகன்:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி, இன்று காலையில் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மரணம் என்னை மீளாத் துயருக்குள்ளாக்கியுள்ளது.  

தமிழிசை சவுந்தரராஜன்:

மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், சிறிய வயதிலேயே, கர்நாடக இசையில் எவரும் பயன்படுத்தாத, மேற்கத்திய இசைக்கருவியான மாண்டலினில் தன் வித்தையை காட்டியவர் ஸ்ரீநிவாஸ். அவரது இழப்பு மாற்று ஏதுமில்லா மனச்சுமையை அளிக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இசைக்கு ஆற்றிய தொண்டும், மீட்டிய இசையும் காற்றுள்ள வரை இறவாப்புகழுடன் இருக்கும். அவர் ஆன்மா அமைதியடைய பிராத்திக்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கர்:

ஸ்ரீநிவாசை, சிறுவயதிலிருந்தே தெரியும். அவர் 14 வயதின்போது நிகழ்த்திய இசை நிகழ்ச்சியை, டிவியில் பார்த்திருக்கிறேன். சிறுவயதிலேயே, மேற்கத்திய இசைக்கருவியை இசைக்கும் திறமையை ஸ்ரீநிவாஸ் பெற்றிருந்தது எனக்கு வியப்பளித்தது. அவர் மரணமடைந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரசூல் பூக்குட்டி:

ஸ்ரீநீவாஸ், மிகவும் திறமையான இசைக்கலைஞர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சங்கர் மகாதேவன்:

இசைப்பயணத்தின் மிகப்பெரிய பகுதி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தபேலா இசைக்கலைஞர் ஹூசைன்:

ஸ்ரீநிவாஸின் மறைவால், இன்று நாம் அனைவரும் அனாதையாக்கப்பட்டுள்ளோம். உனக்காக, தாய்நாடே கண்கலங்குகிறது. எனது சகோதரரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பாடகி ஸ்ரேயா கோஷல்:

உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞரை, நாம் இழந்துவிட்டோம். சிறிய வயதில், அவர் நம்மளை பிரிந்து சென்று விட்டார்.

Comments