அ.தி.மு.க.,வினருக்கு தலைமை உத்தரவு: தி.மு.க., கூட்டத்திற்கு பதிலடி

சென்னை: தி.மு.க., சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த பகுதிகளில் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடத்த, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.

நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே, கடும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர்கள் பேசும்போது, கருணாநிதியை விமர்சிப்பதையே வாடிக்கையாக்கினர்.
இதனால், தி.மு.க., தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்கதையாக இருந்ததால், ஒரு கட்டத்துக்கு மேல், தி.மு.க., தரப்பு அமைதியாகி விட்டது. இருந்தும், சபையில் பிரச்னைகள் ஏற்பட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாத படி, தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், 'சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 31ம் தேதி, சென்னை தி.நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு பேசினர்.

'சட்டசபையில், அ.தி.மு.க.,வினர், முதல்வர் புகழ் பாடுவதிலும், எதிர்க்கட்சி தலைவர்களை குறை கூறுவதிலும் நேரத்தை கடத்துகின்றனர். எதிர்க்கட்சியினர், மக்கள் பிரச்னைகளை பேச அனுமதிக்க மறுக்கின்றனர்' என, தி.மு.க.,வினர் கூறும் குற்றச்சாட்டு, மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறது அ.தி.மு.க., தரப்பு. இதை முறியடிக்கும் வகையில், தி.மு.க.,வினர் கூட்டம் நடத்தும் இடங்களில், அ.தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கம் மற்றும் 'சட்டசபை மாண்பை தொலைத்த தி.மு.க.,' என்ற தலைப்பில், பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடத்த, அ.தி.மு.க., தலைமை முடிவெடுத்திருக்கிறது.இது தொடர்பாக, கட்சியினருக் கும், அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை ஏற்று, கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், அ.தி.மு.க., நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

Comments