சென்னை: அதிமுகவில் இணையுமாறு முதல்வர் ஜெயலலிதா அழைத்தால்
பார்க்கலாம் என்றும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பங்காற்றுவேன்
என்றும் தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர முக்கிய
காரணியாக இருந்தவர் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக
விலகியது.
விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்து வந்த பண்ருட்டி
ராமச்சந்திரன், கடந்த மாதம் 10-ம் தேதி தேமுதிகவில் இருந்து விலகினார்.
எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா
விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
விருது கிடைத்தது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம்
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. அண்ணா
காலத்தில் அவருடன் பேசி, பழகியவர்களில் ஒரு சிலர்தான் இன்று இருக்கின்றனர்.
அவர்களில் எனக்கு அண்ணா விருதினை தமிழக அரசு சார்பில் முதல்வர் புரட்சித்
தலைவி வழங்கியுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். அதற்காக புரட்சித்
தலைவிக்கு நன்றி. அண்ணா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு இது ஒரு
சிறந்த உதாரணம்.
நான் 1956-ல் உதவி மின்பொறியாளராக இருந்தபோது, அண்ணாதான் அந்தப்
பணியை ராஜினாமா செய்யச் சொல்லி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார்.
ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
தற்கால அரசியலை, ‘சாமானிய மக்களின் சகாப்தம்' என்று அண்ணா
சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப, இன்றைக்கு புரட்சித்தலைவி தலைமையில்
சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. அதன் அடையாளம்தான் எனக்குக்
கிடைத்திருக்கும் இந்த விருது.
புரட்சித் தலைவி எனக்கு அளித்த விலை மதிக்க முடியாத பொங்கல் பரிசாக
இதை கருதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக எடுத்துள்ள அரசியல்
நிலைப்பாடு நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக கருதுகிறேன்.
என்னால் உடல்ரீதியாக ஓடியாடி உழைக்க முடியாது. என்றாலும், தேர்தலில்
அதிமுக வெற்றி பெற எனது பங்கை ஆற்றுவேன். அதிமுகவில் சேருவது பற்றி
முடிவெடுக்க வில்லை. முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் பார்க்கலாம்.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
Comments