'கெஜ்ரிவாலிடமிருந்து பதில் இல்லை': குற்றம் சுமத்துகிறது மத்திய அரசு

புதுடில்லி : 'வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு, இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டும், அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை' என, மத்திய அரசு தரப்பில், டில்லி ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:டில்லியில், ஆளும் கட்சியாக உள்ள, ஆம் ஆத்மி கட்சி, வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான நிதி பெற்றுள்ளது.
சட்டத்துக்கு புறம்பாக, இந்த நிதியை, அந்த கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான, கெஜ்ரிவாலும், அந்த கட்சியின் மற்ற தலைவர்களும் பெற்றுள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இரண்டு முறை கடிதம்:

இந்த வழக்கு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து, மத்திய அரசிடம், டில்லி ஐகோர்ட், விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு, நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ராஜிவ் மெக்ரா கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து, கட்சிக்கு நிதி பெற்றது தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி, கெஜ்ரிவாலுக்கும், அவரின் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. வங்கி கணக்கு போன்ற விவரங்களை கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை, அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
உத்தரவு:

இதையடுத்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம், 'ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த கட்சியின் நிதி விவகாரங்கள் தொடர்பான தகவல்களை, மத்திய அரசு, சேகரித்திருக்கவேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, இது தொடர்பான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments