ஆண்களே! இதோ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகள்!

அழகைக் கெடுக்கும் கருவளையம் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் ஆண்கள் அவர்களுக்கு ஏற்படும் கருவளையத்தைப் பற்றி கவலை கொள்கிறார்களே தவிர, அதை போக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் ஆண்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் தற்போதைய ஆண்களுக்கு தங்கள் அழகின் மீது அதிக அக்கறை இருப்பதால், தங்களின் அழகை அதிகரிக்கும் பல வழிகளை தேடுகின்றனர். பொதுவாக ஆண்களின் அழகை கெடுக்குமாறு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையமானது, அதிகப்படியான சோர்வு, வெயிலில் அதிகமாக சுற்றுவது, மன அழுத்தத்தினால் இரவு நேரத்தில் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாதது மற்றும் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காதாலும் ஏற்படும். இத்தகையவற்றை ஆண்கள் தான் அதிகம் மேற்கொள்வார்கள். ஆகவே தான் அவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது.

ஆகவே கருவளையத்தை எப்படி போக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் எளிதில் போக்குமாறான சில இயற்கை வழிகளை கொடுத்துள்ளது. அது என்னவென்று படித்து, அவற்றை தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் கருவளையத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

வெள்ளரிக்காய்
 
கருவளையத்தைப் போக்க உதவும் பொருட்களில் முன்மையானவை தான் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, தினமும் பலமுறை அவ்வப்போது கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து வந்தால், அது கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதோடு, கண்களில் உள்ள சோர்வையும் போக்கிவிடும்.


தண்ணீர்
 
கருவளையம் வர ஆரம்பித்தால், உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். எனவே தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகி வந்தால், அது கருவளையத்தைப் போக்குவதோடு, உடலையும் வறட்சியின்றி வைத்துக் கொள்ளும்.

தூக்கம்
 
ஒருவர் போதிய தூக்கத்தை மேற்கொள்ளவில்லை என்றால், அதை அவர்களது கண்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். எப்படியெனில் ஒரு நாள் சரியாக தூங்காவிட்டாலும், மறுநாள் காலையில் உடனே கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும். எனவே இரவு நேரத்தில் நன்கு கண்களுக்கு ஓய்வு கொடுக்க, நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஒருவர் 7-8 மணிநேரம் தவறாமல் தூங்க வேண்டும்.

டீ பேக் 
 
இது மற்றொரு அருமையான கருவளையத்தைப் போக்கும் இயற்கை வழி. அதற்கு காலையில் டீ பேக் கொண்டு டீ போட்ட பின், அந்த டீ பேக்கை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை அறை வெப்பநிலையில் காய வைத்து, பின்பு அதனை கண்களின் மேல் வைத்து வர வேண்டும்.

தக்காளி
 
அனைத்து வீடுகளிலும் நிச்சயம் தக்காளி இருக்கும். அந்த தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, பின் அந்த கலவையை கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்கலாம்.

பாதாம் எண்ணெய்
 
பாதாம் எண்ணெய் கூட ஒரு சூப்பரான கருவளையத்தைப் போக்கக்கூடிய பொருள். அதற்கு தினமும் இரவில் படுக்கும் போது பாதாம் எண்ணெய் கொண்டு முகம் மற்றும் கண்களைச் சுற்றி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில்
 
 வீட்டில் பாதாம் எண்ணெய் இல்லாவிட்டால், ஆலிவ் ஆயில் இருந்தால், அதனைக் கூட பயன்படுத்தலாம். இதனால் கருவளையம் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

Comments