சென்னை: பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியின் சென்னை வீட்டுக்குள்
புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடிச்
சென்றுள்ளனர்.
பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயியிக்கு சென்னை ஜி.என். செட்டி சாலையில்
சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவரின் அம்மா வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு
சென்றுவிட்டார். அவர் அமெரிக்கா கிளம்பும் முன்பு வீட்டை பாதுகாக்குமாறு
சூர்யா செக்யூரிடீஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்த நூயி நேற்று
தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
காவலாளியைக் காணவில்லை. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும்
கப்போர்டுகள் திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள்
திருடு போயிருந்தன.
இதையடுத்து நூயியின் மேனேஜர் ஸ்ரீலேகா இது குறித்து பாண்டி பஜார் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தார். திருடுபோன பொருட்களின் மதிப்பை நூயியின்
அம்மா தான் கூற வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்திருந்தார். அவரது
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி
வருகின்றனர்.
Comments