உலகின் மிகவும் விலை மதிப்பு கார் என்ற பெருமையை 1963ம் ஆண்டு
தயாரிப்பு மாடல் ஃபெராரி 250 ஜிடிஓ ரேஸ் கார் பெற்றுள்ளது. அமெரிக்காவின்
க்ரீன்விச் பகுதியை சேர்ந்த விண்டேஜ் கார் சேகரிப்பாளர் ஒருவர் வைத்திருந்த
இந்த கார் சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டது.
சிறப்பான பாரமரிப்பில் இருந்த இந்த அரிதான காரை பில்லியனர் ஒருவர் 52
மில்லியன் டாலர் விலை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார். இந்திய மதிப்பில்
ரூ.321 கோடி. இதற்கு முன்னரும் இதே ஃபெராரி 250 ஜிடிஓ ரேஸ் கார்தான்
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன கார் என்ற பெருமையை பெற்றிருந்தது. அந்த
சாதனையை தற்போது மற்றொரு ஃபெராரி 250 ஜிடிஓ கார் விஞ்சியுள்ளது.
மிகவும் பழமையான இந்த ஃபெராரி 250 ஜிடிஓ ரேஸ் கார்கள் தொடர்ந்து அதிக
விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு வருவது ஏன் என்ற ஆச்சரியம் மேலோங்குகிறது
அல்லவா? ஆம், அந்த காரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
லிமிடேட் மாடல்
மொத்தமே 39 ஃபெராரி 250 ஜிடிஓ கார்கள்தான் தயாரிக்கப்பட்டன. லீ மேன்ஸ் 24
ஹவர் உள்ளிட்ட கார் பந்தயங்களுக்காக இந்த கார்களை ஃபெராரி உற்பத்தி
செய்தது.
முந்தைய ஏலம்
இதற்கு முன்பு ஏலம் போன கார் 35 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. அது பச்சை
நிற கார் என்பதுடன் அந்த காலத்தில் பிரபல ரேஸ் வீரராக திகழ்ந்த ஸ்டெர்லிங்
மாஸ் பயன்படுத்தினார் என்பதும் கூடுதல் பெருமை. ஆனால், அந்த காரை விட 49
கூடுதல் விலைக்கு தற்போது மற்றொரு ஃபெராரி 250 ஜிடிஓ கார் ஏலம் போய்
ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டிசைன் டீம்
ஜியோட்டோ பிஸாரினி தலைமையிலான டிசைன் டீம்தான் இந்த காரை வடிவமைத்தது.
சாதாரண பயன்பாட்டுக்கான 250 ஜிடி எஸ்டபிள்யூபி கார் அடிப்படையில் இந்த 250
ஜிடிஓ ரேஸ் கார்கள் தயாரிக்கப்பட்டன.
எஞ்சின்
இந்த கார்களில் 300 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி12 எஞ்சின்
பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதுடன்,
மணிக்கு 280 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.
மோனலிசா....
இந்த கார்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு பல நூறு கோடிகளை கார் பிரியர்கள்
கொட்டி கொடுத்து வாங்குவதால், இதனை கார்களின் மோனலிசா என்று ஆட்டோமொபைல்
துறையினர் வர்ணிக்கின்றனர்.
அதிகரிக்கும் மதிப்பு
1950 முதல் 1960ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஃபெராரி கார்களுக்கு ஆண்டுக்கு
ஆண்டு அதன் மதிப்பு 15 சதவீதம் வரை உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சம்
இந்த காருக்கு 52 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை கொடுத்து
வாங்குவதற்கு பல கோடீஸ்வரர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், இந்த காரை
வாங்கும்போது வருமான வரி உள்ளிட்ட பிரச்னைகளை கருதி அவர்கள் வெளியில்
தங்களது பெயரை தெரிவிப்பதற்கும், ஏலத்தில் நேரடியாக பங்கு கொள்வதற்கும்
தயங்குகின்றனர் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Comments