மும்பை: சாப்பாட்டு செலவிற்காக ரூ1, ரூ 5, ரூ 12க்கு பிரதமர் மன்மோகன்
சிங் மற்றும் சோனியா காந்திக்கு மணியார்டர் அனுப்பும் வித்தியாசமான
போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.கவினர்.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அடி மட்ட மக்களின் வாழ்க்கைத் தரம்
புரிவதில்லை. அப்படியே யாராவது புரிய வைக்க முயற்சி மேற்கொண்டாலும் அது
அரசியலாகி விடுகிறது என்பதற்கு பின் வரும் சம்பவங்களே பெரிய உதாரணாம்.
ஆனால், இவர்களது அரசியல் சண்டைகளுக்கும் பலிகடா ஆக்கப்படுவது அப்பாவி
மக்களே என்பது மறுக்க இயலாத உண்மை.
பொருந்தாத புள்ளி விவரம்...
சமீபத்தில், தனிநபர் வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான புள்ளி விவரம்
ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்
விவரங்கள் மக்களின் வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாதவை என எதிர்கட்சிகள்
குற்றம் சாட்டின.
வயிறாற சாப்பிடலாம்...
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ்
கட்சியின் செய்தி தொடர்பாளர் 12 ரூபாய் இருந்தால் ஒருவர் மும்பையில் வயிறாற
சாப்பிடலாம் எனவும், மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஷீத் மசூத், டெல்லியில் 5
ரூபாய்க்கு கூட சாப்பாடு கிடைக்கிறது என்றும் அடுத்தடுத்து கருத்து
தெரிவித்தார்கள்.
நெத்தியடி...
இவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக, வித்தியாசமான போராட்டத்தில்
குதித்துள்ளனர் பாஜகவினர். அதில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.
எம்.எல்.ஏ, கோவர்தன் ஷர்மா தலைமையில் பா.ஜ.க.வினர் பிரதமர் மன்மோகன் சிங்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் சாப்பாட்டு செலவுக்கு மணி ஆர்டர்
அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
மணியார்டர்கள்...
1 ரூபாய், 5 ரூபாய், 12 ரூபாய் என தனித்தனியாக பிரதமருக்கும், சோனியா
காந்திக்கும் அவர்கள் தொடர்ந்து மணி ஆர்டர் அனுப்பி வருகின்றனர்.
முடிந்தால் இந்த ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி திருப்தியாக சாப்பிடுங்கள்
என்பதை உணர்த்துவதற்காகவே இந்த் வித்தியாசமான போராட்டமாம்.
Comments