டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால்
இரண்டே இரண்டு துறைகள் மட்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
1. ஏற்றுமதியாளர்கள்
2. சுற்றுலாத்துறை
காரணம், ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களது ஏற்றுமதிப் பொருளுக்கான விலை கடந்த
இரண்டு மாதங்களுக்கு முன் இருந்ததை விட சுமார் 20 சதவீதம்
அதிகமாகிவிட்டது. அதாவது, ஒரு பொருளை 2 மாதங்களுக்கு முன் ரூ. 50க்கு
ஏற்றுமதி செய்தவர்களுக்கு இன்று அதே பொருளுக்கு ரூ. 62 விலை கிடைக்க
ஆரம்பித்துள்ளது.
சுற்றுலாத்துறையினரின் மகிழ்ச்சிக்குக் காரணம்:
சுற்றுலாத்துறையினரின் மகிழ்ச்சிக்குக் காரணம், ரூபாயின் மதிப்பு
சரிந்துள்ளதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்துள்ளது.
வசதி...வசதி:
முன்பு 10,000 டாலர் கொண்டு வந்தால் இந்திய மதிப்பில் அது ரூ. 5 லட்சமாக
இருந்தது. இப்போது அதே 10,000 டாலர், இந்தியாவுக்கு வந்தவுடன் ரூ. 6.2
லட்சமாகிவிட்டது. இதனால் இன்னும் வசதியான ஹோட்டலில் தங்கலாம், வசதியான
காரில் சுற்றிப் பார்க்கலாம், இரண்டு மாதத்துக்கு முன்பு இருந்ததை விட
அதிகமாகவே பர்சேஸ் செய்யலாம்.
எகிப்து, துருக்கிக்கு நோ:
வழக்கமாக எகிப்து, துருக்கி மாதிரியான நாடுகளுக்குச் செல்வோர் கூட அங்கு
நிலவும் அரசியல் பிரச்சனைகள், உள்நாட்டு போர்- மோதல்களால் தெற்காசியா
பக்கம் பார்வையைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
குறைந்த டாலரில் நிறைந்த வசதி:
அதிலும், குறிப்பாக ரூபாயின் மதிப்பு சரிவால் குறைந்த டாலரில் நிறைந்த
வசதியோடு சுற்றிப் பார்க்கும் இடமாக இந்தியா மாறிவிட்டதால், இந்தியாவுக்கு
வருவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஹங்கேரி..
கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இப்போது இந்தியாவுக்கு
வருவோரின் எண்ணிக்கை சடாரென 15 சதவீதம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக
ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


Comments