வாஷிங்டன் : இன்னும் சில தினங்கள்தான்... அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற ட்ரில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.
தற்போதைய சூழலில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டாலும், ஒபாமாவுக்கு சற்றே சாதகமான நிலை உள்ளது என்பதே உண்மை.
ஒரு சதவீதம் ஆதரவு...
ஐயோவா, விஸ்கான்ஸின் மற்றும் ஒஹயோவில்
வெற்றிபெற்றால் ஒபாமா மீண்டும் அதிபர் என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்று
மாநிலங்களிலும் இது வரை ஒபாமா முன்னிலையில் இருப்பதாகத்தான்
கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஃப்ளோரிடா, வர்ஜினியா இரண்டையும் எட்டிப்பிடித்து விட்டால் ஒபாமாவுக்கு
கடும் நெருக்கடி கொடுக்கும் நிலையில் ராம்னி இருக்கிறார். காரணம், இந்த இரு
மாநிலங்களிலும் ராம்னிக்கு ஒரு சதவீதம் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்
கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன் நடந்த வெளியுறவுக்
கொள்கை தொடர்பான விவாதத்தில் ஒபாமா, ராம்னி இருவருமே இந்தியாவுடனான உறவு
குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
நேரிடையாக குறிப்பிடாவிட்டாலும், அவர்களின் மற்றைய விவாதங்கள், மற்றும்
முந்தைய செயல்பாடுகளைக் கொண்ட, இந்தியாவுடன் இருவருடைய நிலைகள் என்ன என்று
கணிக்க முடியும்.
பாகிஸ்தானுக்கு யார் ஆதரவு?
இந்தியாவுடன் ஏனைய நாடுகளுக்கு உள்ள உறவின்
ஆழத்தை, அவர்களின் பாகிஸ்தானுடனான உறவை வைத்துச் சொல்ல முடியும்.
பாகிஸ்தான் எனது தீவிர நண்பன் என சொல்லும் எந்த நாடும் இந்தியாவுடன்
நெருக்கமாக இருப்பது சாத்தியமல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்காவின்
செல்லப்பிள்ளையாக கருதப்பட்ட பாகிஸ்தானுடனான உறவு, ஒபாமா ஆட்சியில் மிகவும்
கசந்த நிலையில் இருக்கிறது.
தங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அல் கொய்தாவுக்கு ஆதரவாக செயல்பட்டு
இரட்டை நிலை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப் பட்டது. பாகிஸ்தானின்
ஒரு பகுதியிலேயே ஒசாமா பின் லாடன் பதுங்கி இருந்ததும், பாகிஸ்தானின் அனுமதி
இல்லாமலேயே, அமெரிக்க சீல்ஸ் படையினர் சென்று ஒசாமா பின் லேடனை சுட்டு
வீழ்த்தியதும், பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை அமெரிக்கா இழந்து விட்டதற்கான
அடையாளமாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவின் நிதியுதவியும் பெருமளவில்
குறைக்கப்பட்டுள்ளது.
ராம்னியின் பாக் பாசம்!
பாகிஸ்தானிடமிருந்து மெல்ல மெல்ல ஒபாமா விலகி
வரும் நிலையில், ராம்னியோ பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று
தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கையில்
போய்விடக்கூடாது. அதனால் பாகிஸ்தானின் நிலையான ஆட்சி தொடர நாம் பொருளாதார
உதவி செய்து உறவை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்.
சீனாவும் அமெரிக்காவும்
அமெரிக்க சந்தையை ரொனால்டு ரீகன் சீனாவுக்கு
திறந்து விட்ட பிறகுதான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடித்தது. அதே
வேளையில் பல்வேறு தொழிற்சாலைகள் சீனாவுக்கு இடம்பெயர்ந்து, அமெரிக்காவில்
வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கும் வழிவகுத்தது.
முதலாளி வர்க்கம் சீனாவில் முதலீடு செய்வதை விரும்பும் போது, தொழிலாளி
வர்க்கத்தினரோ சீனாவின் பெயரைக் கேட்டாலே விஷமுண்டது போல் முகம் சுளிக்க
ஆரம்பித்து விட்டனர்.
'மேட் இன் சீனா'...
அமெரிக்க சந்தையில் 'மேட் இன் சீனா'
பொருட்களுக்கு மவுசு குறையத் தொடங்கியுள்ளது. ஒபாமாவின் நான்கு ஆண்டு
ஆட்சியில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை திரும்பவும் கொண்டு வந்து
கொண்டிருக்கின்றன. 'மேட் இன் அமெரிக்கா' பெருமையை நிலை நாட்டுவதே தன்னுடைய
குறிக்கோள் என்று ஒபாமா பிரச்சாரம் செய்கிறார்.
ராம்னியோ தனது தொழில் நிறுவன்ங்கள் மூலம் ஏற்கனவே சீனாவில் பெரும்
முதலீடுகள் செய்துள்ளார். அமெரிக்க நிறுவன்ங்களை வாங்கி, தொழிற்சாலையை
சீனாவுக்கு ஏற்றுமதி செய்தவர் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது
அடுக்கடுக்காக சுமத்துப்பட்டு வருகின்றன.
பண மதிப்பை குறைத்துக் காட்டும் சீனா
ஆனாலும் ராம்னி ஒரு விஷயத்தில் மட்டும்
சீனாவுக்கு எதிராக பேசியிருக்கிறார். அதாவது சீனா வேண்டுமென்றே தனது பண
மதிப்பை மிகக் குறைவாக காட்டி வருவதன் மூலம், அமெரிக்கா மற்றும் உலகச்
சந்தையில் அவர்களின் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதற்கு வழி செய்துள்ளது.
இது உலக வர்த்தக கட்டுப்பாடுகளை மீறிய செயல். நான் ஆட்சிக்கு வந்தால்
முதல் நாளிலேயே இதை கண்டித்து சட்டம் இயற்றுவேன் என்று கூறியுள்ளார். அவரது
சட்டம், சீனாவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தும், அதன் விளைவுகள் எப்படி
இருக்கும் என்று சரிவரத் தெரியவில்லை.
ஒபாமாவோ, ஏற்கனவே தான் சீனாவுக்கு கட்டுப்பாடுகள் விதித்து, அதன் மூலம்
வர்த்தகத்தை நெறிப்படுத்தி வருவதாகவும், சீனாவுக்கு அமெரிக்க ஏற்றுமதி
இரட்டிபாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது வர்த்தக விஷயத்தில் சீனா உலக
வர்த்தக நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் இருவரும்
கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருக்கின்றனர்.
சீனாவுடன் கூட்டு வைக்க விரும்பும் ராம்னி
ஆனால் ராம்னி ஒரு படி மேலே போய், சீனாவின்
பணமதிப்பை கட்டுப்படுத்தும் வேளையில், அவர்களுடன் நாம் மேலும் நல்லுறவை
வளர்த்துக் கொள்ள வேண்டும். ராணுவம் உள்ளிட்ட விவகாரங்களில் பரஸ்பர உறவை
பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். அமெரிக்காவுக்கு அடுத்த வல்லரசாக
சீனா உருவெடுப்பதை சாமானியா அமெரிக்கர்களே விரும்புவார்களா என்ற கேள்வி
உள்ள நிலையில், ராம்னியின் சீனக் கொள்கைக்கு யாரும் செவி கொடுப்பதாக
தெரியவில்லை. ஆனால் ராம்னி வெற்றி பெற்றால் அமெரிக்க - சீன உறவில் புதிய
மாற்றங்கள் உருவாகும், அது இந்தியாவுக்கு பாதகமாகவும் அமையும் என்பதை
நிச்சயமாக சொல்ல முடியும்.ஒபாமாவின் பார்வையோ...
ஒபாமாவின் பார்வையோ வேறு விதமாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக, ராணுவ உறவை வலுப்படுத்தி வடக்கு ஆஸ்திரேலியாவின்
டார்வினில் அமெரிக்க ராணுவத்தளம் அமைத்து விட்டார். இது சீனாவின் முக்கிய
வர்த்தக பாதையான, இந்தோனேசியாவுக்கு கிழக்கே உள்ள கடல்பகுதிக்கு
அருகாமையில் அமைந்துள்ளது. சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் 'செக்' காவே இது
கருதப்பட்டது. கிழக்காசிய நாடுகளில் சீனாவின் தலையீட்டை கட்டுப்படுத்த
அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கை என்றே சொல்லலாம்.அதிபர் விவாதத்தில், இந்த ராணுவ நடவடிக்கையை குறிப்பிட்ட ஒபாமா, சீனாவுடன் வர்த்தகரீதியான உறவுகளை தொடரும் வேளையில், கிழக்காசிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்கவும் செய்யவேண்டும். சீனா ஏனைய நாடுகள் போல் சரியான வர்த்தக கொள்கைகளை கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா எங்கே வருகிறது?
ஒபாமா ஆட்சியேற்ற புதிதில் பெங்களூருக்கு
செல்லும் வேலைகள் பஃபல்லோவுக்கு வரவேண்டும் என, இந்திய பிபிஓ மற்றும்
கம்ய்யூட்டர் நிறுவனங்களை குறி வைத்து பேசினார். அமெரிக்காவில் மாதம்
தோறும் லட்சக்கணக்கான வேலைகள் சரிந்து கொண்டிருந்த நேரம் அது.
வெளிநாட்டிற்கு வேலைகளை அனுப்பும் நிறுவனங்களை கடுமையாக
சாடிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்றார்.சிறிது காலத்திற்குப் பிறகு மாண்வர்களிடம் உரையாடும் போது கணிதம், அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள், இந்தியாவில் வளரும் குழந்தைகளுடன் நீங்கள் போட்டியிட்டால்தான் ஜெயிக்க முடியும். வேலை வாய்ப்பு கிடைக்கும், என்று அமெரிக்கர்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டினார். ஒரு வகையில் இந்திய கல்வி முறைக்கும், இளைஞர்களின் திறமைக்கும் ஒபாமா தந்துள்ள பெரிய அங்கீகாரம் இது. பெருமைக்குரிய விஷயம்தானே!
அமெரிக்க கல்விக் கொள்கையில் மாற்றம்
புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் போது அது
அமெரிக்கர்களுக்கு கிடைக்காமல் போகிறதே என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான்
கல்விக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் தீட்டியுள்ளார் ஒபாமா. அதன்
மூலம் அடுத்த தலைமுறை புதிய வேலைகளுக்கு அமெரிக்கர்களை தயார்ப்படுத்துவது
தான் அவரின் நோக்கம்.மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகித்தால் தான், அமெரிக்காவின் முதல் நிலை தொடரமுடியும் என்றும் அவர் நம்புகிறார்.
இந்தியாவில் கல்வி வியாபாரமாகிக் கொண்டிருக்கும் வேளையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்று ஒபாமா திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவின் திட்டங்களை கருத்தில் கொண்டு, கல்வி விஷயத்திலும், புதிய அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் விஷயத்திலும் இந்தியா தீர்க்கமான தீவிர முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம்.
ஸ்டெம் விசா திட்டம்
உயர்வேலை வாய்ப்புகளை வெளிநாட்டிற்கு அனுப்ப
விரும்பாத ஒபாமாவின் நிலைப்பாடு, இந்தியர்களுக்கு சற்று நெருடலாகத்தான்
இருக்கும். அதே வேளையில் அமெரிக்க நிறுவனங்களில் மேல்படிப்பு படிக்கச்
செல்லும் வெளி நாட்டவர்களுக்கு 'ஸ்டெம் விசா‘ என்ற சிறப்பு குடியுரிமை
(க்ரீன்கார்டு) வழங்கும் திட்டத்திற்கு ஒபாமாவும், அவரது கட்சியினரும்
ஆதரவு தெரிவித்துள்ளனர்.ராம்னியின் கட்சியினரும் இந்த திட்டத்தை வரவேற்ற நிலையிலும் சில கருத்து வேறுபாடுகளினால் இன்னும் சட்ட வடிவம் பெறாமல் இருக்கிறது. அமெரிக்கப் பல்கலைகழகங்களும் வெளி நாட்டவர்களின் வருகையை ஊக்கப்படுத்த 'ஸ்டெம் விசா' திட்டத்தை வலியுறுத்தி வருகின்றனர். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா ஆட்சிக்கு வந்த நெருக்கடியான காலக்கட்ட்த்திலும் ஹெச்1 பி விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இந்தியர்களுக்கான வாய்ப்பு முற்றிலுமாக தடைபட்டு விடவில்லை. சற்று மாறி வேறு பாதையில் போக வேண்டியிருக்கலாம்.
இந்திய வர்த்தக மற்றும் அரசு முறை உறவு
அமெரிக்கா அரசின் இசைவுக்கேற்றவாறு
செயல்படுபவர் மன்மோகன் சிங் எனறு ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. அன்னிய
முதலீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஒபாமா இந்தியாவுடன் சற்று அழுத்தமான நிலையை
மேற்கொண்டதாகவே கருதப்படுகிறது.ஆனாலும் ஆஃப்கானிஸ்தான் சீர்திருத்த நடவடிக்கையில் இந்தியாவை முக்கிய உறுப்பினராக்கிக் கொள்ள அமெரிக்கா உதவியது. பாகிஸ்தான் - சீனா உறவு நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் இந்திய உறவு இயல்பாகவே வலுவடைந்து வருகிறது. இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ற பொதுவான களத்தில் இரண்டும் இணைந்து செயல்படுவதில் தடைகள் எதுவும் இருக்காது.
பாகிஸ்தான், சீனா என்ற இரு பெரும் எதிரிகளை தனது நெருங்கிய நண்பர்களாகக் காட்டி பிரச்சாரம் செய்துவரும் ராம்னியைவிட, ஒபாமா மீண்டும் அதிபராவதே இந்தியாவுக்கு நல்லது. நன்மைகள் கிடைக்கிறதோ இல்லையோ... அட்லீஸ்ட் எதிர்விளைவுகள் இல்லாமலாவது இருக்குமல்லவா!

Comments